EWS உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்ற தீர்ப்பு – முக்கிய தகவல்கள்

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனத் தீர்ப்பளித்துள்ளனர்.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், 2 பேர் எதிராகவும் திர்ப்பளித்துள்ளனர்.

ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு அரசமைப்பின் அடிப்படை அம்சங்களை மீறவில்லை என தெரிவித்துள்ளனர்.

இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகள்: நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, பெலா எம். திரிவேதி மற்றும் ஜே பி பர்டிவாலா.

இந்தியாவின் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் நீதிபதி எஸ். ரவிந்திர பட் ஆகியோர் இந்த தீர்ப்போடு ஒத்துப் போகவில்லை.

ஐந்து நீதிபதிகள் அமர்வில் ஒருவரான நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான 103வது அரசமைப்பு திருத்தம் செல்லுபடியாகும் என்றும் அது அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்றும் கூறியுள்ளார்.

“இட ஒதுக்கீடு என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட எந்தவொரு பிரிவினருக்குமான உறுதியான நடவடிக்கை. எனவே, பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு என்பது அரசமைப்பை மீறாது.

பட்டியல் சாதிகள்/பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்களுக்கான இட ஒதுக்கீடுகளில்இருந்து விலக்குவது அரசமைப்பு ரீதியாக செல்லுபடியாகும். கிடைக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் 50% கூடுதலாக பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது அரசமைப்புப்படி செல்லுபடியாகும். ஏனெனில் உச்சவரம்பு என்பது நெகிழ்வானது, அது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும்,” என்று நீதிபதி தினேஷ் மகேஷ்வரி கூறியுள்ளார்.

“பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு செல்லுபடியாகும்” உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு

நீதிபதி மகேஷ்வரியின் தீர்ப்புடன் ஒத்துப் போன நீதிபதி பெலா திரிவேதி, பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு இந்திய அரசமைப்பின் அவசியமான அம்சமாகும் என்று தெரிவித்துள்ளார்.

“சட்டம் மக்களின் தேவைகள் குறித்து புரிந்து கொள்கிறது. அதேபோல பொருளாதார ரீதியில் சிலரை ஒதுக்கி வைத்திருப்பது குறித்து தெரிந்துள்ளது. இந்தியாவில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு சம வாய்ப்பை வழங்க பழமையான சாதி அமைப்புதான் இட ஒதுக்கீட்டிற்கு வித்திட்டது என்று சொல்ல முடியாது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்களுக்கு பிறகு அரசமைப்பை மாற்றியமைக்க வழிவகுக்கும் வகையில் இட ஒதுக்கீடுகள் குறித்த மாற்றுப் பார்வை தேவை” என நீதிபதி திரிவேதி தெரிவித்துள்ளார்.

நீதிபதி பர்டிவாலா, ஒட ஒதுக்கீடு ஒரு இறுதியான முடிவல்ல, ஆனால் சமூக பொருளாதார நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை தீர்ப்போடு ஒத்துப் போகாத நீதிபதி ரவிந்திர பட், “இந்த திருத்தம் அரசமைப்பு ரீதியாக தடை செய்யப்பட்ட பாகுபாட்டை பின்பற்றுவதுபோல உள்ளது. சமத்துவத்தின் ஆன்மாவை இது தாக்குவதாக உள்ளது. இட ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட 50 வரம்பை மீறுவது, மேலும் பல சிக்கலுக்கு வழிவகுக்கும்,” என தெரிவித்துள்ளார்.