இந்தியா முழுவதும் நாளை அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி

நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி நாளை அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது, காகித வடிவிலான பணத்திற்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். இந்நிலையில், நாடு முழுவதும் டிஜிட்டல் கரன்சி சோதனை முறையில் நாளை முதல் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்கள் அச்சிடுவதற்கான செலவு இல்லை என்பதுடன், கருப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையில் டிஜிட்டல் கரன்சிகளை உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன. ஸ்வீடன் உள்ளிட்ட 9 நாடுகளில் ஏற்கெனவே டிஜிட்டல் நாணயம் பயன்பாட்டில் உள்ளது.

அரசுப் பத்திரங்கள், பங்கு பரிவர்த்தனை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில், மொத்த பயன்பாட்டில் டிஜிட்டல் கரன்சியை முதற்கட்டமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில், சில்லரை வர்த்தக அளவில் இந்த கரன்சியின் பயன்பாட்டை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட 9 வங்கிகளின் மூலம் இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.