Parali Nellaiappar

குடும்பம்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரலிக்கோட்டை என்னும் சிற்றூரில் 1889ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 18ஆம் நாள் சுப்பிரமணிய பிள்ளை, முத்துலட்சுமி அம்மாள் என்னும் இணையரின் மூன்று ஆண் மக்களுள் இரண்டாவது மகவாகப் பிறந்தார். இவர் சென்னைக்கு அருகிலுள்ள குரோம்பேட்டையில் 1971ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 28ஆம் நாள் மறைந்தார்.

நெல்லையப்பருக்கு மூத்தவர் பரலி சு. சண்முகசுந்தரம்பிள்ளை. இவர் வ.உ.சிதம்பரனாரோடு இணைந்து அவர்தம் சுதேசி இயக்கத்தைப் பரப்புவதிலும் வலுப்படுத்துவதிலும் முனைப்போடு இருந்தவர். சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குகள் பலவற்றை திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தின் பல இடங்களில் விற்றுப் பல்லாயிரம் ரூபாயைத் திரட்டிக் கொடுத்தவர். அன்றைய மதுரை மாவட்டம் வத்தலக்குண்டில் பிறந்த சுப்பிரமணிய சிவாவை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து வ.உ.சிக்கு அறிமுகம் செய்து வைத்தவர். சுப்பிரமணிய சிவத்தால் வந்தே மாதரம் பிள்ளை என அழைக்கப்பட்டார்.

நெல்லையப்பருக்கு இளையவர் பரலி சு. குழந்தைவேலன். நெல்லையப்பரோடு இணைந்து வ.உ.சி.யின் கப்பல் கம்பெனியில் கணக்கராக வேலைப் பார்த்தவர். பின்னாளில் லோகோபகாரி என்னும் இதழை நடத்துவதில் நெல்லையப்பருக்குத் துணைநின்றவர்.

நெல்லையப்பர் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே, தன்னுடைய இறுதிக் காலத்தில் பூங்கோதை என்னும் பெண்ணைத் தத்தெடுத்து வளர்த்தார்.

கல்வியும் இளமைக்காலமும்

நெல்லையப்பர் மெட்ரிக்குலேசன் வரை பள்ளியில் படித்தவர். அதற்கு அப்பால் தமிழிலக்கிய, இலக்கணங்களைக் கற்று, கவிதை எழுதும் திறமை பெற்றிருந்தார். 1907ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த சில நாள்களிலேயே தூத்துக்குடியில் வ.உ.சி. நடந்திய சுதேசி கப்பல் கம்பெனியில் கணக்கராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டில் மராட்டிய மாநிலத்திலுள்ள சூரத் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கு வ.உ.சி. உள்ளிட்டவர்களைத் திரட்டுவதற்காகத் தூத்துக்குடிக்கு வந்த சி. சுப்பிரமணிய பாரதியை வ.உ.சி.யின் வீட்டில் முதன்முறையாகக் கண்டார். அங்கிருந்த பாரதியின் கவிதைகள் அடங்கிய நான்கு பக்க வெளியீடு ஒன்றைப் படித்தும் இந்தியா இதழைப் படித்தும் பாரதிபால் அன்பு கொண்டார்.

விடுதலைப் போரில் பங்கேற்பு

வ.உ.சி., சுப்பிரமணிய சிவம், சுப்பிரமணிய பாரதி, நீலகண்ட பிரமச்சாரி, அரவிந்தர், வ.வே.சு.ஐயர் முதலிய விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரோடு தொடர்ந்து பழகிய நெல்லையப்பர் தானும் விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றார். அவற்றுள் சில:

  • பிரித்தானியருக்கு இயன்ற வழிகளில் எல்லாம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கில் இருந்த வ.உ.சிதம்பரனார், ஆங்கிலேயர்களின் வீடுகளில் வேலைபார்த்த துணி வெளுப்பாளர்கள், வேலையாட்கள், சமையற்காரர்களைத் திரட்டி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்திற்கு நெல்லையப்பர் பெரிதும் உதவியாக இருந்தார்.
  • 1908ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 3ஆம் நாள் விடுதலைப் போராட்ட வீரர் விபின்சந்திரபால் விடுதலை செய்யப்பட்டார். அந்நிகழ்வைக் கொண்டாடுவதற்காக காவல்துறையினரின் தடையை மீறி வ.உ.சி. தூத்துக்குடியில் சுப்பிரமணிய சிவத்தோடு இணைந்து மார்சு 9ஆம் நாள் ஊர்வலம் ஒன்றை நடத்தினார். அதில் பரலி சு. நெல்லையப்பரும் கலந்துகொண்டார். கப்பல் கம்பெனி நடத்தியது, ஊர்வலம் நடத்தியது, வந்தே மாதரம் எனக்கூவியது ஆகிய குற்றங்களுக்காக திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வ.உ.சி.சிவா ஆகிய இருவரும் மார்சு 12ஆம் நாள் கைது செய்யப்பட்டு பாளையம்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.  இதனைக் கண்டித்துக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான துண்டறிக்கை ஒன்றினை அச்சிட்டு நெல்லையப்பர் வெளியிட்டார். அதற்காக அவரை காவல்துறை கைது செய்தது; நீதிமன்றம் ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்தது; அவர் பாளையம்கோட்டைச் சிறையில் வ.உ.சி, சிவம் ஆகியோரோடு அடைக்கப்பட்டார்.
  • 1930ஆம் ஆண்டில் மரைக்காடு என்னும் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். அதனால் ஆறு திங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.
  • 1932ஆம் ஆண்டில் காந்தியடிகளின் கட்டளையை ஏற்று சென்னை சிந்தாரிப்பேட்டையில் கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார்.
  • 1941ஆம் ஆண்டில் நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரகம் என்னும் தனியாள் அறப்போராட்டத்தில் கலந்துகொண்டார். அதனால் பெல்லாரி சிறையில் ஆறு திங்கள் அடைக்கப்பட்டார்.

புதுவை வாழ்க்கை

1909ஆம் ஆண்டில் இறுதியில் வ.உ.சி.க்கு சட்டப்படி விடுதலைப் பெற்றுத்தர ஏதேனும் வழியிருக்கிறதா என அறிவதற்காக பாரிஸ்டர் பாலசுப்பிரமணிய ஐயர், வழக்கறிஞர் சாமிநாதன் ஆகியோரைச் சந்திக்க சென்னைக்கு நெல்லையப்பர் வந்தார். வாய்ப்பில்லை என அறிந்து வருந்தினார். அப்பொழுது புதுவையில் இருந்து சென்னை வந்திருந்த நீலகண்ட பிரமச்சாரியைச் சந்தித்தார். அவரோடு சேர்ந்து புதுவையில் வாழும் பாரதியாரைச் சந்திக்க புதுவை சென்றார். கலவை என்னும் இடத்தில் நீலகண்ட பிரமச்சாரியோடு சில நாள் தங்கினார். பின்னர் 1910ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 1911ஆம் ஆண்டு சூன் வரை பாரதியார் வீட்டில் தங்கினார். 1910ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடல்வழியாக புதுவைக்கு வந்த அரவிந்தரை துறைமுகத்திற்குச் சென்று அழைத்து வந்தார். 1911 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் கோயம்புத்தூர் சிறையிலிருந்த வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார்.

கோயம்புத்தூர் வாழ்க்கை

வ.உ.சி.க்கு பாரதியார் எழுதிய மூன்று விருத்தங்கள் கொண்ட சீட்டுக்கவியை எடுத்துக்கொண்டு நெல்லையப்பர் கோயம்புத்தூர் சென்றார். அங்கு வழக்கறிஞர் சி. கே. சுப்பிரமணிய முதலியார் உதவியோடு கோவை-பேரூர் சாலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்துத் தங்கினார். அவ்வப்பொழுது சிறைக்குள் சென்று வ.உ.சி.யைச் சந்தித்து, அவர் இடும் கட்டளைகளை அந்த ஆசிரமத்தில் இருந்தவாறே நிறைவேற்றினார். வ.உ.சி.யை தன்வரலாறு எழுதும்படி வேண்டினார். 1912ஆம் ஆண்டின் நடுவில் வ.உ.சி.யை மலையாள நாட்டிலுள்ள கண்ணனூர் சிறைக்கு மாற்றியதும், நெல்லையப்பர் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

சென்னை வாழ்க்கை

1912ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் விடுதலை பெற்ற வ.உ.சி. சென்னை சிந்தாரிப்பேட்டையில் குடியேறினார். அவரைக் காண்பதற்காக அங்கு வந்த நெல்லையப்பர் முதலில் வ.உ.சி.யின் வீட்டிலும் பின்னர் வெவ்வேறு இடங்களிலும் வாழ்ந்து, 1950ஆம் ஆண்டு முதல் தன்னுடைய இறுதிக்காலம் வரை குரோம்பேட்டையில் வசித்தார். தான் வாழ்ந்த பகுதிக்கு பாரதிபுரம் எனப் பெயர் சூட்டினார். அங்கிருந்த பிள்ளையாருக்கு பாரதி விநாயகர் எனவும் பெயரிட்டார்.

1921 செப்டம்பர் 11ஆம் நாள் இரவு ஒரு மணிக்கு இறந்த பாரதியாரின் உடலை மறுநாள் சுடுகாட்டிற்குத் தூக்கிச் சென்றவருள் நெல்லையப்பரும் ஒருவர்.

இதழாளர்

  • 1908ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 7ஆம் நாள் வ.உ.சி.க்கு இரட்டை வாழ்நாள் தண்டனையும் சிவத்திற்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டன. இதனைக் கண்டித்து நெல்லையப்பர் கட்டுரையொன்று எழுதினார். அது பாரதியார் நடத்திய இந்தியா இதழில் வெளியிடப்பட்டது. இதுவே அச்சில் வந்த அவரின் முதற் படைப்பு.
 * புதுவையில் இருந்து பாரதியர் வெளியிட்டு வந்த சூரியோதயம் கிழமை 
 இதழில் 1910ஆம் ஆண்டிலும் கர்மயோகி மாத இதழில் 1911ஆம் ஆண்டிலும்
  நெல்லையப்பர் துணையாசிரியராக இருந்தார்.
  • சென்னையிலிருந்து கோ.வடிவேலு செட்டியார் வெளியிட்ட லோகோபகாரி இதழில் 1913 – 15 ஆம் ஆண்டுகளிலும் 1917-18ஆம் ஆண்டுகளிலும் துணையாசிரியராக இருந்தார்.
  • தெ.பொ.கிருட்டிணசாமிப் பாவலர் என்பவருடன் இணைந்து 1915-16ஆம் ஆண்டுகளில் பாரதி என்னும் இதழை நடத்தினார்.
  • 1917ஆம் ஆண்டு முதல் 1921 செப்டம்பர் வரை தேசபக்தன் இதழில் திரு.வி.க., வ.வே.சு.ஐயர் ஆகியோர் ஆசிரியராக இருந்தபொழுது நெல்லையப்பர் துணையாசிராகவும் பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  • 1922ஆம் ஆண்டில் லோகோபகாரி இதழை விலைக்கு வாங்கி 1941ஆம் ஆண்டு வரை ஆசிரியராக இருந்தார். அப்பொழுது மதுரையைச் சேர்ந்த ஐ. மாயாண்டி பாரதி இவ்விதழில் துணையாசிரியராக இருந்தார்.
  • மீண்டும் 1943 ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை லோகோபகாரி இதழில் ஆசிரியராக இருந்தார்.

பாரதியாருக்கு புரவலர்

1913ஆம் ஆண்டு முதல் பாரதி சென்னைக்கு இரண்டாவது முறையாக வந்து வாழத் தொடங்கிய 1919ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் வரை தான் பணியாற்றிய இதழ்களிலும் சுப்பிரமணிய சிவம் நடத்திய ஞானபாநு முதலிய இதழ்களிலும் பாரதியார் கவிதைகளை வெளிவரச் செய்தார். அவற்றிற்காகக் கிடைத்த பணத்தையும் பாரதிக்கு தேவைப்பட்ட பணத்தை வேறு வகைகளில் திரட்டியும் புதுவை நண்பர்கள் யாருடைய பெயருக்காவது அனுப்பி பாரதிக்குக் கிடைக்கச் செய்து வந்தார். அவ்வாறு செய்வது நெல்லையப்பரின் கடமையெனப் பாரதியார் கருதினார். பாரதியாரால் “தம்பீ!” என அழைக்கப்பட்ட நெல்லையப்பர், பாரதியின் மறைவுக்குப் பின்னர் அவரின் புகழைப் பரப்பும் நோக்குடன் தனது லோகோபகாரி இதழில் பாரதி போட்டிகளையும் செப்டம்பர் 11ஆம் நாள் பாரதிவிழாவையும் ஆண்டுதோறும் நடத்தினார்.

பாரதியார் படைப்புகளின் பதிப்பாளர்

1917ஆம் ஆண்டு பாரதியாரின் கண்ணன் பாட்டு (ஆகசுடு), 19 பாடல்கள் அடங்கிய நாட்டுப்பாட்டு (அக்டோபர்), பாப்பா பாட்டு, முரசுப் பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தார்.

1923ஆம் ஆண்டில் தன் நண்பர்கள் சிலரோடு இணைந்து பாரதி பிரசுராலயம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி அதன்வழியாக குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாரதி அறுபத்தாறு ஆகிய பாடல்கள் அடங்கிய தொகுதி ஒன்றை வெளியிட்டார்.

1953ஆம் ஆண்டில் பாரதியார் படைப்புகளை தமிழக அரசு வெளியிடுவதற்காக அமைத்த குழுவில் நெல்லையப்பர் இடம்பெற்றார்.

கவிஞர்

நெல்லையப்பர் இயல்பாகவே கவிதை மனம் கொண்டவராக இருந்தார். வ.உ.சி.யோடு தூத்துக்குடியில் இருந்தபொழுதே கவிதைகள் புனைந்தார். புதுவையில் பாரதியோடு இருந்த பொழுது அவருடைய பாடல்களைப் படித்து, கருத்தும் திருத்தம் கூறும் அளவிற்குக் கவிதை நுட்பங்களை அறிந்திருந்தார். தேசபக்தன் இதழில் பணியாற்றிய பொழுது பாரதிதாசன், நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை எழுதிய பாடல்களில் திருத்தம் செய்து வெளியிட்டு வந்தார்.

ஏறத்தாழ 50ஆண்டுகளாகத் தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 142 பக்கங்களில் நெல்லைத் தென்றல் என்னும் நூலாக 1966ஆம் ஆண்டு வெளியிட்டார். மேலும் பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டார்.

எழுத்தாளர்

வ. உ. சி. பற்றி பரலி சு. நெ. எழுதிய நூலின் அட்டை

இதழ்களில் பணியாற்றிய பொழுது தலையங்கம், செய்திக் கட்டுரைகள், மதிப்புரைகள் எனப் பலவற்றை தன்னுடைய இயற்பெயரிலும் பாரி என்னும் புனைப் பெயரிலும் எழுதினார்.

அவற்றுள் கைக்குத்தல் அரிசியின் மகத்துவம், பாரதியின் தமிழ்ப்புலமை, கங்கைகொண்ட சோழபுரம், பாரம் சுமக்கும் பள்ளிப் பிள்ளைகள், குழந்தைகள் அதிகம் பெற வேண்டா, தமிழின் பெருமை போன்ற சில ஓரிரு பக்கக் குற்றேடுகளாக அச்சிட்டு பலருக்கும் வழங்கினார்.

பாரதியார், வ.உ.சி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை முறையே பாரதியார் சரித்திரம் (1928 – சோமசுந்தர பாரதியார், சக்கரைச் செட்டியார் ஆகியோருடன் இணைந்து), வ.உ.சிதம்பரம்பிள்ளை சரித்திரம் (1944 – சக்தி காரியாலய வெளியீடு) என்னும் பெயரில் நூல்களாக வெளியிட்டார்.

மேலும் தமிழ்த் திருமண முறை என்னும் நூலையும் எழுதினார். இவர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகள் முறையாக இதுவரை தொகுக்கப்படவில்லை.

மொழிபெயர்ப்பாளர்

நெல்லையப்பர் பின்வரும் நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்:

  1. பக்கிம் சந்திர சட்டர்சியின் ராதாராணி
  2. பக்கிம் சந்திர சட்டர்சியின் சோடி மோதிரம்
  3. சுவர்ணலதா (டாக்டர் பா.நடராசனுடன் இணைந்து)
  4. காந்தியடிகளின் சுயராஜ்யம்
  5. காந்தியடிகளின் சுகவழி
  6. சிவானந்தர் உபதேசமாலை

பதிப்பாளர்

லோகோபகாரி வெளியீடு, பாரி வெளியீடு ஆகிய பதிப்பகங்களை நெல்லையப்பர் நடத்தினார். அவற்றின் வழியே பின்வரும் நூல்களை வெளியிட்டார்:

  1. ஆத்மசிந்தனை, சி. இராஜகோபாலாச்சாரியார்
  2. மாதர் கடமை, பி.பி.சுப்பையா
  3. பகவான் அரவிந்தர் பத்தினியாருக்கு எழுதிய கடிதங்கள் (1948)
  4. பூலோகத்தின் சப்த அதிசயங்கள்
  5. திருவாசகம், மாணிக்கவாசகர்
  6. நளன் தூது (நைடதம்), அதிவீர்ராம பாண்டியன்

இறுதிக்காலம்

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவித்தொகையை இந்திய ஒன்றிய அரசாங்கம் (Union Government of India) இவருடைய இறுதிக்காலத்தில் வழங்கி வந்தது. அந்த உதவித்தொகையை 1967ஆம் ஆண்டில் இவருடைய பொருளாதார நிலை உயர்ந்துவிட்டது என தமிழக அரசு அனுப்பிய குறிப்பின் அடிப்படையில் இந்திய ஒன்றிய அரசாங்கம் நிறுத்திவிட்டது. எழுத்தாளர் எதிரொலி விசுவநாதன், அன்றைய சட்ட மேலவை உறுப்பினர்களாக இருந்த நாமக்கல் வெ. இராமலிங்கம், தி. க. சண்முகம்ஆகியோரின் முயற்சியால் 1969ஆம் ஆண்டு முதல் மீண்டும் அவ்வுதவித் தொகை கிடைத்தது.

நெல்லையப்பரைப் பற்றிய நூல்கள்/ கட்டுரைகள்

  1. தனிப்பாடல்கள்,வ.உ.சி. (1915)
  2. பாரதியாரின் தம்பி, எதிரொலி விசுவநாதன்
  3. இருவர் கண்ட பாரதி, எதிரொலி விசுவநாதன், அசோகன் பதிப்பகம் – சென்னை, 1989.
  4. வ.உ.சி.யும் பரலி சு. நெல்லையப்பரும், செ.திவான், வ.உ.சி.இலக்கியப்பேரவை-திருநெல்வேலி, 5.9.1999.
  5. தியாகத்தின் இமயம் ஐயா பரலி சு.நெல்லையப்பர், நமச்சிவாயம் இராமகிருஷ்ணன், சைவநெறி – இந்திய சுதந்திரப் பொன்விழா மலர், 1998
  6. பரலி சு.நெல்லையப்பர், கவியோகி சுத்தானந்த பாரதியார், ந. சோமயாஜூலு பதிப்பித்த நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு, நெல்லை 1977.
  7. தமிழ் வளர்த்த எழுத்துச் சிற்பிகள் தொகுதி 1, கலைமாமணி விக்கிரமன், நிவேதிதா புத்தகப் பூங்கா