“சிங்கப்பூரில் வ.உ.சிதம்பரம்பிள்ளை சிலை” – மீண்டும் நிறுவிட அறங்காவர்களிடம் முன்வைக்கப்படும் கோரிக்கை

 

இந்த சிலை 1950ம் ஆண்டு அன்றைய இந்தியாவின் பிரதமர் நேரு அவர்களால் திறக்கப்பட்டது. அய்யா பி.ஜி.பி அவர்களால் இந்த நினைவிடம் கட்டப்பட்டது என்பதை அறிவோம். இந்நிலையில் இந்திய விடுதலைக்காக போராடி சிறை சென்ற செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் சிலையை அங்கு மீண்டும் நிறுவிட கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்மறையான் என்பவர் வெளியிட்ட முகநூல் பதிவில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவு பின்வருமாறு “நமது மகாத்மா காந்தி நினைவு மண்டபம் அறங்காவலர்கள் குழுவினர்க்கு, எனது பணிவான வணக்கம்”. “மண்டபத்தின் உள்ளே மாடிப்படி ஓரமாக கீழ்தளத்தில், மேடை அமைத்து வ.உ.சி சிலையை நமது முன்னோர்கள் நிறுவினர், பலரும் அறிவர்.”

“அண்ணல் காந்தி, வ.உ.சி இருவரின் பிறந்த நாள், நினைவு நாட்களில் மாலை சூட்டி வணக்கம் செலுத்துவதுண்டு. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, புதுப்பிப்பு பணி காலத்தில் குத்தகையாளர் உடைத்து எறிந்து விட்டதாக அறங்காவலர்களுள் ஒருவராகிய வழக்கறிஞர் மதிப்பிற்குரிய ஐயா. திரு.சீனிவாஸ் ராய் என்னிடம் கூறினார். நான் மிகவும் கண்கலங்கி வருத்தமுற்றேன்.”

“வருகிற செப்டம்பர் மாதம் வ.உ.சி பிறந்த நாளுக்கு முன் அவரது சிலையை அதே இடத்தில் நிறுவிட, பணிவன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன் நன்றி”

குறிப்பு : நமது சிண்டா குடும்பல நலப்பிரிவு அங்கு செயல்பட்டது. அவர்களிடம் வ.உ.சி சிலை படங்கள் உள்ளன.

என்று அந்த பதிவில் அவர் கூறியுள்ளார் தமிழ்மறையான், நிச்சயம் குறிப்பிட்ட அந்த சங்கம் இந்த கோரிக்கையை பரிசீலித்து வ.உ.சி அவர்களின் சிலையை மீண்டும் அங்கு அமைப்பார்கள் என்று நம்பப்படுகிறது.