காளிங்கராயர் குடும்ப வாரிசு கொலை வழக்கில் சிறையில் இருந்தவருக்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு

தமிழகத்தில் எதிர்கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை கனகச்சித்தமாக செய்து வந்து பாஜக பெயரை தினம் தினம் எதிரொலிக்க செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அத்தனை தொகுதிகளும் எங்களுக்கு தான் என்று திமுக, அதிமுக களமிறங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தாலும், கோவை மீது தனி கவனம் செலுத்தி வருகின்றன.

 

கொங்கு மண்டலம் முழுவதும் திமுக வேட்பாளர்களை களமிறக்கி இருக்கும் நிலையில், அண்ணாமலையின் ஓட்டு வங்கியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறது அதிமுக.

காளிங்கராயர் குடும்ப வாரிசு கொலை வழக்கில் சிறையில் இருந்தவருக்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் வலம் வரும் வாட்ஸ் அப் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவையில் உள்ள லட்சுமி விலாஸ் மில்ஸ் நிறுவனத்தின் வாரிசான விவேக் காளிங்கராயர் கடந்த 1993-ம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக வெங்கட்ராமன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் வெங்கட்ராமன், ஜான்பாண்டியன் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஜான் பாண்டியன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை கடந்த 2019-ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜான் பாண்டியன் உட்பட ஐந்து பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது. வழக்கின் முக்கிய குற்றவாளியான வெங்கட்ராமன், சிறையில் இருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.

 

இந்த நிலையில் ஜான் பாண்டியன் தற்போது தென்காசி மக்களவைத் தொகுதியில் பாஜக சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இது காளிங்கராயர் குடும்பம், செல்வாக்கு பெற்றுள்ள பொள்ளாச்சி மற்றும் கோவை மக்களவைத் தொகுதிகளில் பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வாட்ஸ் அப் தகவல் ஒன்று வேகமாக பல்வேறு குழுக்களிலும் பரவி வருகிறது. அதில் காளிங்கராயர் வாரிசைக் கொன்ற ஜான்பாண்டியனை வேட்பாளராக்கி அண்ணாமலை அழகு பார்ப்பதாகவும், சொந்த இனத்தையே அரசியலுக்காக காட்டி கொடுக்கலாமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், ஊத்துக்குளி ஜமீந்தாரர்களின் வம்சத்தினருமான காளிங்கராயர் குடும்பத்தினரும் ஒரே சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாட்ஸ் – அப் செய்தி பரவலால் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.