ஆ.ராசா அவர்களுக்கு கொங்கு ஆறுமுகம் அவர்களின் கண்டனம்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
சி ஆறுமுகம் கண்டன அறிக்கை:

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் சமீபத்தில் பேசிய பொதுக்கூட்டத்தில் “கலைஞர் பேனா போட்ட கையெழுத்தால் தான் கொங்கு வேளாளர் சமூகம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளமண்டி வைத்திருப்பார், அண்ணாமலை ஆடு மேய்த்து கொண்டு இருப்பார், வானதி சீனிவாசன் கூடை பின்னிகிட்டு இருப்பார் என பேசுகிறார்”
ராசா’வின் தனிப்பட்ட அரசியல் விமர்சனத்துக்காக ஒட்டு மொத்த கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தையும் ஒப்பிட்டு பேசுவதும், ஆடு மேய்ப்பதும், வெள்ளமண்டி நடத்துவதும், வேளாண்மை செய்வதும் தரம் தாழ்ந்ததாக நினைத்து பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!

கொங்கு வேளாளர் சமூகம் சங்க காலம் தொட்டு வேளாண்மையை குல தொழிலாக கொண்டு – காட்டை திருத்தி காணி ஆக்கி, ஆற்று நீர் மேலாண்மை செய்து, ஏர் உழுது, விதைத்து ,அறுவடை செய்து,உணவு உற்பத்தி செய்யும் மகத்தான பணியை செய்து வாழ்ந்து வருகின்றனர். மனிதன் வேட்டை தொழிலில் இருந்து மாறி வேளாண்மை செய்ய தொடங்கிய இடத்தையே நாகரீக வளர்ச்சி ஏற்பட்டது. கொங்கு வேளாளர்கள் தமிழ் இனத்தின் வேளாண் நாகரீக வளர்ச்சிக்கு காரணமாக விளங்க கூடியவர்கள். ஆக வேளாண்மை செய்வதையும் அதன் சார்ந்த தொழில்கள் செய்வதை இழிவாக பேசுவது, எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை மீதும் அரசியல் ரீதியாக ஆயிரம் விமர்சனங்களை நீங்கள் வைக்கலாம் ஆனால் கொங்கு வேளாளர் சமூகம் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மொத்த ஒதுக்கீட்டையும் அனுபவிப்பதில்லை. இன்னும் பல சமூகங்கள் இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் பங்கிட்டு கொள்கின்றனர். இட ஒதுக்கீட்டை மட்டுமே நம்பி பிழைக்கும் சமூகமாக கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகம் இல்லை! இதே சமூகத்தில் எந்த ஒரு இட ஒதுக்கீட்டு சலுகையும் கிடைக்காமல் இன்னும் ஆயிரக்கணக்கானோர் விவசாயம் செய்து வருகின்றனர். பள்ளி கல்வியை கூட வறுமையினால் நிறைவு செய்ய முடியாமல் தொழிலாளியாக தன் வாழ்க்கையை துவங்கி இன்று பல்வேறு தொழில் நிறுவனத்தின் உரிமையாளராக தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டக் கூடியவர்களாக எத்தனையோ கவுண்டர்கள் உள்ளனர். சமூக நீதி பேசுகின்ற திமுக அமைப்பில் இருந்து கொண்டு தனிப்பட்ட நபர்களை விமர்சிப்பதற்காக அவர்கள் சார்ந்த சமூகத்தையே விமர்சிப்பது தான் திராவிட மாடல் சமூகநீதியா? அல்லது சாதிய மோதலை தூண்டும் யுக்தியை திமுக கையிலெடுக்கிறதா?