Pallankuli

உங்களுக்கும் தெரியும் இல்ல( பல்லாங்குழி)
—————————–
பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். இரு வரிசையிலும் சேர்த்து பதினான்கு குழிகள் இருப்பதால் பதினான்கு குழி விளையாட்டு என்பதை பன்னாங்குழி என அழைத்தனர். பின்னர் பல்லாங்குழி என மருவியிருக்க வேண்டும். பொதுவாக புளியங்கொட்டையைவைத்தோ அல்லது ஏதாவது பெரிய விதைகளையோ அல்லது சோளி (சோவி)களையோ ஆடுபொருளாக வைத்து இவ்விளையாட்டு ஆடப்படுகிறது.

ஆட்ட வகைகள்

• இருவர் ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் (பக்க எல்லைக்குழியாக இருந்தால் வலது கைப்பக்கக் குழியையும் சேர்த்து) குழிக்கு ஐந்து காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளாகத் துல்லியமான சமத் தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.

• தன்னுடைய காய்களை எடுத்து ஒருவர் ஆட்டம் தொடங்குகிறபொழுது முதன்முறையாக சமத்தன்மை குலைகின்றது.

• எடுத்தாடுபவர் குழியில் காய்கள் இழப்புக்கு உள்ளாகின்றன.

• சுற்றிக் காய்களை இட்டு வந்து ஒரு வெற்றுக்குழி (இன்மை அல்லது இழப்பு) யினைத் துடைத்து அடுத்து முதலில் இட்ட ஐந்து காய்களுக்குப் பதிலாக நிறையக் காய்கள் (பெருஞ்செல்வம்) கிடைக்கின்றன.

• ஆட்டத்தில் மற்றும் ஒரு இடைநிகழ்வும் ஏற்படுகிறது. ஒரு வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினையும் இட்டு வரும்போது அது நாலாகப் பெருகிய உடன் அதனைப் பசு என்ற பெயரில் அந்தக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்கிறார்.

• இதன் விளைவாக ஆட்டத் தொடக்கத்தில் இருந்த ஐந்து காய்கள் (தொடக்க நேரத்து முழுமை) மீண்டும் ஒரு குழிக்கும் ஒரு போதும் திரும்பக் கிட்டுவதே இல்லை.

• காய்களை இழந்தவர் (காட்டாக 15 காய்கள் குறைவாகக் கிடைத்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரமின்மை ஏற்படுகிறது.

• ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்து கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்குக் ‘கஞ்சி காய்ச்சுதல்’ என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும்.

• தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது.
விடுகதை

பல்லாங்குழி குறித்து சில விடுகதைகளும் உண்டு.

• ஏழும் ஏழும் பதினான்கு சோலைத் தச்சன் செய்த வேலை அது என்ன? எனும் விடுகதைக்கு பல்லாங்குழி விடை.
ஏனையவை

3 பேர் விளையாடும் மிகவும் விறுவிறுப்பான “ராஜா பாண்டி”, ஒருவர் மட்டுமே முடிவே இல்லாமல் விளையாடும் “சீதா பாண்டி” (சீதை அசோக வனத்தில் இருக்கும்போது விளையாடியதாம்), நிறைய காய்கள் வைத்து விளையாடும் “காசி பாண்டி”.