V.O.Chidhambaram pillai

தெற்குச் சீமையின்
தீரத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்த… #வ_உ_சிதம்பரனார்

…………………………….
வ.உ.சி.யை அடைத்து வைத்திருந்த கோயமுத்தூர் சிறைச்சாலையை “ஸ்ரீ பாரத நாட்டின் புதிய புண்ய ஸ்தலம்” என்று மகாகவி #பாரதி, குறிப்பிட்டார். பிள்ளையவர்களை, ஸ்ரீ #அரவிந்தர், மாபெரும் கர்மவீரர் என்று பாராட்டினார்.

பாலகங்காதர திலகரின் அரசியல் இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் வ.உ.சி. திலகரின் மகத்தான தியாகம் வ.உ.சி.யை பிரமிப்பில் ஆழ்த்தியது.

பின்னாளில் `திலக மகரிஷியின் வரலாறு` என்ற தலைப்பில், அவரை மகரிஷியாகவே உணர்ந்து ஒரு வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதினார் வ.உ.சி.

#திலகர் குறித்த பல செய்திகள் அடுத்தடுத்து வ.உ.சி.யின் செவிகளை வந்தடைந்த வண்ணம் இருந்தன. இச்செய்திகளால் தம் பந்த பாசங்கள் அனைத்தையும் துறந்து இந்தியத் தாயின் மகன் என்ற உணர்வு மட்டுமே மேலோங்கியவராக வ.உ.சி. மாறினார்

தியாகத்தை அர்ப்பணித்த வ.உ.சி. தனது இறுதி நாட்களில் சந்தித்தது வேதனையும், துயரமும்தான். பொது வாழ்வில் ‘தகுதியே தடை’ என்பது அந்தக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. உழைப்பும், தகுதியும் முக்கியமல்ல என்பது பொது வாழ்வில் நுழைபவர்களுக்கு பாலபாடம். தியாகச் சுடர் வ.உ.சி.யைப் பற்றி என்னுடைய ‘நிமிர வைக்கும் நெல்லை’யில் செய்தப் பதிவுகள்:

விடுதலையே நமது குறிக்கோள், அதனை எப்பாடு பட்டேனும் அடைந்தே தீரவேண்டும்; விடுதலையின்றி வாழ்வதைவிடச் சாவதே மேல்; பொது நலத்திற்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் உயிர் துடிப்பவனே நற்பேறு அடைவான் என்று கூறி மக்களைத் தட்டியெழுப்பிய வ.உ. சிதம்பரனார், வெள்ளையனை எதிர்க்க ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ எனும் சுதேசிக் கப்பல் கழகத்தைத் தொடங்கினார். இவருடைய தேசியப் போராட்டத்திற்கு இரு முறை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் குறைக்கப்பட்டது. 1906-ல் சுதேசிக் கழகத்தைத் தொடங்க வ.உ.சி. மக்களிடம் நன்கொடை கேட்டார்.

பாரதியார், #இராஜாஜி முதலியோர் பொருள், நிதி திரட்டினர். சேலத்தில் வழக்குரைஞராய்த் தம் பணியைத் தொடங்கிய இராஜாஜி, தான் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை தேசியக் கப்பல் கழகத்திற்கு அளித்தார். மக்கள் தலைக்கு நான்கு அணா மேனிக்கு (25 காசு) பொருளுதவியளித்தனர். இவ்வாறு சேர்த்த பணத்திலிருந்து இரண்டு கப்பல்கள் வாங்கப்பெற்றன.

24.09.1907 வெளியான அறிக்கையில் சுதேசிக் கப்பல் கம்பெனியின் அக்கிராசனராக (தலைவராக) பாலவநத்தம் ஜமீன்தார் பொ. பாண்டித்துரைத் தேவர் அவர்களுடன், எஸ். நல்லபெருமாள் பிள்ளை, வி.ஏ.வி.எஸ். வெங்கடாசலம் செட்டியார், எம்.வி. மாயன் நாடார், எஸ். வெங்கடேச ராமானுஜம் செட்டியார், என்.டி.ஏ. ஆறுமுகம் பிள்ளை, எஸ்.எஸ்.வி. கிருஷ்ணப் பிள்ளை, வி.ஏ.எஸ். ஆதிநாராயணன் செட்டியார், ஏ.எஸ்.வி. திருச்சிற்றம்பலம் பிள்ளை, கொழும்பில் வணிகம் செய்துவந்த ஏ.எம். செய்யத் இப்ராஹிம், திண்டுக்கல் ஏ. அசனுசைன் இராவுத்தர், இராமநாதபுரம் சீனி அசனுசைன் இராவுத்தர் ஆகியோரைச் சேர்த்து மொத்தம் 31 பேர் இயக்குநர்களாக (டைரக்டர்களாக) இருந்தனர். கௌரவச் செயலாளராக என்.டி. கிருஷ்ண அய்யங்காரும், துணைக் காரியதரிசியாக வ.உ. சிதம்பரம் பிள்ளையும், ஆடிட்டராகத் திருநெல்வேலி வழக்கறிஞர் பி.கே. இராம அய்யர், எம். கிருஷ்ணன் நாயர், பால் பீட்டர், பி.எல். வேணு அய்யர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். சேலம் விஜயராகவ ஆச்சாரியார் சட்ட ஆலோசகராகப் பொறுப்பிலிருந்தார். நாவலர் சோமசுந்தர பாரதியும் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். கம்பெனி அலுவலகம் தூத்துக்குடி பீச் ரோடு நான்காம் எண் கட்டடத்தில் இயங்கியது.

சுதேசிக் கப்பல் கழகம், உலகப் புகழ்பெற்ற கடலாளுமை படைத்த வெள்ளையரை எதிர்த்து விடுதலையுணர்ச்சியின் அடிப்படையிலேயே வ.உ.சி. கப்பலை அலைகடல் நடுவுள் செலுத்தினார். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் இரவில் நகருக்குள் தூங்குவதற்கு அஞ்சி, இரவு முழுவதும் படகுகளிலேறிக் கடலில் மிதந்து தூங்கினரென்றால் வ.உ.சி.யின் விடுதலை வேட்கை எப்படிப்பட்டது என்று நன்கு அறிய முடியும். வ.உ.சி.யின் விடுதலைக் குரலைக் குற்றமாகக் கொண்டே அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

விபின் சந்திரபாலர் சிறையிலிருந்து விடுதலை பெற்றதை நாடெங்கும் விழாவாகக் கொண்டாடும்பொழுது, நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்நிகழ்ச்சியை நடத்த வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் ஊர்வலமாக நடந்து கூட்டத்திற்கு வருவதற்குத் தடை பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடையை மீறி ஊர்வலத்திலும், பொதுக் கூட்டத்திலும் இருவரும் பேசினர். பல குற்றச்சாட்டுகள் வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் மீது சுமத்தி, ஆள் தூக்கிச் சட்டத்தின் கீழ் 1908 மார்ச் 12-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அடுத்த நாள் 13-ம் தேதி திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்து வெள்ளையர் அரசை எதிர்த்துப் போராடினர். இதனைத் திருநெல்வேலிக் கலகம் என்று குறிப்பிடுவது உண்டு. மார்ச் 14-ம் தேதி தச்சநல்லூரிலும், கரூரிலும் மக்கள் எழுச்சிமிகு போராட்டத்தை நடத்தினர். பலரின் பசியின்போது உணவளித்த சிதம்பரனாரின் கரங்கள், கோவைச் சிறையில் செக்கிழுத்து இன்னலுற்றன.

வ.உ.சி. வழக்கில் உதவ டாக்டர் #வரதராஜூலு நாயுடு, அடிக்கடி நெல்லைக்கு வந்து செல்வார். பாரதியை, வ.உ.சி. மாமா என்று அழைப்பார்.

விடுதலைக்குப் பின்பு வ.உ.சிதம்பரனார் திருக்குறளுக்கு உரை எழுதுதல் மற்றும் இலக்கியப் பணியில் ஈடுபட்டார். வறுமையோடு போராடிக் கொண்டிருந்தார். செல்வச் சீமானாக இருந்த வ.உ.சிதம்பரனார், சென்னை பெரம்பூரில் சில காலம் வாழ்ந்தபொழுது #தவிடு_விற்று வாழ்க்கை நடத்தினார். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் அருகில் உள்ள விஸ்வகர்மா பள்ளியின் அருகில் உள்ள ஒரு வீட்டில் வறுமையில் வாடியதும், கோவில்பட்டி நீதிமன்றத்துக்குக் #கிழிந்த_கோட்டை உடுத்திக்கொண்டு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டதையும் பார்த்துப் பலர் கண்ணீர் சிந்தினர்.

வறுமையில் வாடினாலும் தமிழ் வளர்க்க வேண்டுமென்று தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். சா.வையாபுரி பிள்ளை, வெங்கடேசுவர நாயுடு ஆகியோர் வ.உ.சி. க்குத் துணையாக இருந்தனர்.

சிறையிலிருந்து திரும்பியபோது வ.உ.சி நொந்துபோன உடலோடும் உள்ளத்தோடும் ஆன்மாவோடும்தான் திரும்பினார்.

பாரதி கனவு கண்டது போல் அவரை மக்கள் கூட்டம் திரண்டு சென்று வரவேற்கவில்லை. அவ்வளவு அச்சம் அந்நிய ஆட்சிக்கு! ”
(“நாடு நாம் தலைவர்கள் ” – பக் 125 – 127-அகிலன்)