யார் இந்த சூரியமூர்த்தி?

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுக்கா சிவகிரி பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.சூரியமூர்த்தி. எஸ்.செங்கோட்டையன் எஸ்.பார்வதி தம்பதினருக்கு 15.04.1972 ல் பிறந்த இவருக்கு எஸ்.பத்மாவதி என்ற மனைவியும், எஸ்.எஸ்.ஹரி, எஸ்.எஸ்.பொன் வருண் என்ற இரு மகன்கள் உள்ளனா். B.A படித்து விவசாயம் தொழில் செய்து வருகிறார். இவா் 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கட்சி சார்பாக மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியிலும், 2006 ஆம் ஆண்டு மூன்றாவது அணியாக பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் வெள்ளக்கோவில் சட்டமன்ற தொகுதியிலும், 2016 ஆம் ஆண்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

இவா் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் 2 ஆண்டுகள் கொங்கு இளைஞர் அணி ஒன்றிய பொறுப்பாளராகவும், 5 ஆண்டுகள் கொங்கு வேளாளர் பேரவை மாவட்ட செயலாளராகவும், 10 ஆண்டுகள் கொங்கு வேளாளர் கவுண்டர்  பேரவை மாநில செயலாளராகவும், 5 ஆண்டுகள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைமை நிலைய செயலாளராகவும், 8 ஆண்டுகள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில இளைஞரணி செயலாளராகவும், தீரன் படைத்தலைவர் என கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார். இது தவிர கட்சித் தலைமை அறிவித்ததின்படி, 2011 ஆம் ஆண்டு மயில்கள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி போலீசாரால் கைது செய்யப்பட்டு 21 நாட்கள் சிறை சென்றுள்ளார். விவசாயம் சம்பந்த (கள் இறக்குதல், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது மற்றும் கொங்கு மண்டலத்திற்காக போராட்டங்கள் நடத்தி 15 முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள் ளார்.

2002 ஆம் ஆண்டு மஞ்சள் மற்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று நாள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உள்ளார். சமுதாய ரீதியாக பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு சமுதாய விழிப்புணர்வு, சமுதாய பாதுகாப்பு பெண்கள் மற்றும் குலதெய்வ பாதுகாப்பு சம்பந்தமாக பிரச்சாரம் மேற்கொண்டும், 1992 ஆம் ஆண்டு கோவை செழியன் வழிகாட்டுதலின்படி கொங்கு வேளாளக் கவுண்டா்கள் பேரவையில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கி தற்போது வரை விவசாயிகள் மற்றும் கொங்கு மண்டல் பகுதி மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் நடைபயணங்கள் மேற்கொண்டுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தோ்தல் ஏப்ரல் 19 ந் தேதி நடைபெற உள்ளது. தோ்தலில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக அணி அமைத்து தோ்தலுக்கு தயாராகி வருகின்றனா். இதில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் பாராளுமன்ற மக்களவை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக எஸ்.சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இவா் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அதற்கான அறிவிப்பை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆா்.ஈஸ்வரன் அறிவித்துள்ளார். நாமக்கல் பாராளுமன்ற மக்களவை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் எஸ்.சூரியமூர்த்திக்கு நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளா் மாதேஸ்வரன் முன்மொழிந்துள்ளார்.